மதுராந்தகம் நகரில் லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் புதன்கிழமை இறந்தார்.
மதுராந்தகத்தை அடுத்த வீராணகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி ( 78). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் சென்றார்.
பின்னர், திரும்பி வருவதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, சூனாம்பேடு பகுதியில் இருந்து வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.