கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் மூலம் பொதுமக்கள் 800 பேர் பயனடைந்தனர்.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் காரப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுபத்ரா வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
முகாமில், பொதுமக்கள் 800 பேருக்கு ரத்த அழுத்தம், சிறுநீரகத்தில் உப்பு அளவு, கருப்பை வாய் புற்றுநோய், காது, மூக்கு, தொண்டை ஆகிய பரிசோதனைகளை மருத்துவக் குழுவினர் செய்து, மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
இதில், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் மீனாகுமாரி புருசோத்தமன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், அரசு ஒப்பந்ததாரர் ஏழுமலை மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள்
கலந்துகொண்டனர்.