திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 18-ஆம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை மாணிக்கவாசகர் உத்ஸவம் தொடங்கியது. இதையொட்டி, அலங்கார ரூபத்தில் மாணிக்கவாசகர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 23-ஆம் தேதி வரை இந்த உத்ஸவம் நடைபெறுகிறது.
மாணிக்கவாசகர் உத்ஸவம் நடைபெறும் நாள்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இரவு நடராஜருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். அப்போது, கோயிலில் திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும்.
மார்கழி மாதப் பிறப்பு: இந்த நிலையில், மார்கழி மாதப் பிறப்பையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 16) முதல் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 18) அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஸ்ரீவேணுகோபால சுவாமி, ஸ்ரீகஜலட்சுமி அம்மனுக்கு அபிஷேகமும், பின்னர் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.