வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் திறக்கப்பட்டுள்ள புதிய மதுக் கடையை உடனடியாக அகற்றக் கோரி, தமுமுக, மமகவினர் மற்றும் பொதுமக்கள் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
வந்தவாசி நகரில் பல்வேறு பகுதிகளில் சுமார் 5-க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வந்தன. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில், அச்சிறுப்பாக்கம் சாலை, பழைய பேருந்து நிலையம் எதிரில் என இரு இடங்களில் புதிய மதுக் கடைகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அச்சிறுப்பாக்கம் சாலையில் திறக்கப்பட்ட மதுக் கடை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மூடப்பட்டது. ஆனால், பழைய பேருந்து நிலையம் எதிரில் திறக்கப்பட்ட மதுக் கடையில் விற்பனை நடைபெற்றது.
இந் நிலையில், பழைய பேருந்து நிலையம் எதிரில் திறக்கப்பட்டுள்ள மதுக் கடையையும் உடனடியாக அகற்றக் கோரி, தமுமுக, மமக நகரத் தலைவர் ஜெ.அக்பர் தலைமையில், அந்தக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்தக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், வட்டாட்சியர் அரிக்குமார் அரசு நிகழ்ச்சிக்காக வெளியே சென்றிருந்ததால், அப்போது அலுவலகத்திலிருந்த தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பொன்னுசாமியிடம் இதுகுறித்து அவர்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.