செய்யாறில் உள்ள திருவத்திபுரம் தலைமை அஞ்சலகம் இடம் மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து, ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு செய்யாறு வட்டக் கிளைத் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தலைமை அஞ்சலகத்தை தற்போது செயல்பட்டு வரும் கட்டடத்துக்கு அருகேயே ஒலி, ஒளி மிக்க தரைத்தளப் பகுதிக்கு மாற்ற வேண்டும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வசதியாக சென்று வரக்கூடிய கட்டடப் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ஓய்வூதியர் சங்கச் செயலர் எம்.சுப்பராயலு, தலைமை நிலையச் செயலர் ஆர்.ராமசாமி, துணைத் தலைவர் ஏ.இ.சிம்மக்குட்டி, இணைச் செயலர் சி.ஜெயபால், ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.சிவஞானம், அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.ஸ்ரீதர், மாளிகைப்பட்டு ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.