திருவண்ணாமலையில் 111 ஆண்டுகள் பழைமையான வெள்ளித் தேரோட்டம் திங்கள்கிழமை (நவம்பர் 19) நடைபெறுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெறுகிறது. முன்னதாக, வெள்ளி விமானங்களில் எழுந்தருளி ஸ்ரீவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் வீதியுலா வருகின்றனர்.
இதன்பிறகு, 111 ஆண்டுகள் பழைமையானதும், பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டதுமான வெள்ளித் தேரில் எழுந்தருளி ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வீதியுலா வருகிறார். பஞ்ச ரதங்களின் வீதியுலாவுக்கு முன்னோட்டமாக வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.
குவியும் பக்தர்கள்: திங்கள்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்குப் புறப்படும் வெள்ளித் தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். வெள்ளித் தேரைத் தொடர்ந்து ஸ்ரீபராசக்தி அம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உத்ஸவர் சுவாமிகள் வீதியுலா வருகின்றனர்.