செங்கம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் அமைக்கப்பட்ட நூலகங்களை நாள்தோறும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் நூலகங்கள் உள்ளன. அந்த நூலகங்களைக் கண்காணிக்க தினக்கூலி பணியாளராக அரசுப் பணியில் இருந்து ஒய்வுபெற்ற நபரை நியமனம் செய்து நூலகத்தை தினமும் காலை - மாலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு ஊர்ப்புற நூலகங்கள் இயங்கி வந்ததால் பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக பெரும்பாலான கிராமங்களில் நூலகங்கள் திறக்கப்படுவதில்லை. அப்படி திறக்கப்படும் நூலகத்தில் புத்தகங்கள், செய்தித் தாள்கள் ஏது இல்லாமல் கடமைக்குத் திறக்கப்படுகின்றன. சில கிராமங்களில் நூலகக் கட்டடடம் சமூக விரோதிகள் கூடாரமாகவும், மாட்டுத் தொழுவமாகவும் மாறிவிட்டன.
எனவே, இதுபோன்ற செயல்களைத் தடுத்து கிராமப்புற மாணவர்கள் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இந்த நூலகங்களை நாள்தோறும் திறக்கவும், செய்தித் தாள்கள், புத்தகங்களை வாங்கி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.