திருவண்ணாமலை நகர கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட செயல்களைக் கண்டித்து, வியாபாரிகள் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தி தரமற்ற பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்வதுடன், கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை நகராட்சியில் இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வியாழக்கிழமை திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நகராட்சி ஆணையரைச் சந்தித்து வியாபாரிகள் மனு அளிக்கச் சென்றனர். ஆணையாளர் இல்லாததால், நகராட்சி அலுவலக மேலாளரிடம் தங்களது கோரிக்கை மனுவை வியாபாரிகள் அளித்தனர்.
இந்த மனுவில், ஜிஎஸ்டி வரி செலுத்தி, பிளாஸ்டிக் கொள்முதல் செய்துள்ளோம். எனவே, திருவண்ணாமலை நகராட்சியில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.