திருவண்ணாமலை அருகே பைக் மீது வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளி இறந்தார். மற்றொரு தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
திருவண்ணாமலை, வஉசி நகரைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி ஐயப்பன் (31). இதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிகள் குமார், புகழ்மணி. இவர்கள் மூவரும் பைக்கில் புதன்கிழமை வேலைக்குச் சென்றனர்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் ஒட்டக்குடிசல் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன், பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் ஐயப்பன் அதே இடத்தில் இறந்தார்.
பலத்த காயமடைந்த குமார், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகழ்மணி காயமின்றி உயிர் தப்பினார்.
தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் விரைந்து சென்று ஐயப்பனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.