செங்கம் அருகே வேளாண் துறை மூலம் மலை கிராம விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் சாகுபடி குறித்து வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
செங்கம் வேளாண் துறை மூலம் கிளையூர், ஊர்கவுண்டனூர், பண்ரேவ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மலை கிராம விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் ஊர்கவுண்டனூர் கிராமத்தில் நடைபெற்றது.
பயிற்சியை வேளாண் உதவி இயக்குநர் (பொ) கோபாலகிருஷ்ணன் தொடக்கிவைத்து, இயற்கை வேளாண்மை, மண் வளம் குறித்து விவசாயிகளிடையே விளக்கிக் கூறினார்.
சிறுதானிய மகத்துவ மையத் தலைவர் பேராசிரியர் பரசுராமன், சிறுதானிய பயிர்களான சாமை, தினை, வரகு போன்ற பயிகள் சாகுபடி முறைகள் குறித்தும், அதன் மூலம் அதிக மகசூல் பெறுவது குறித்தும் விளக்கினார்.
வேளாண் துறை மானியத் திட்டங்கள் குறித்து வேளாண் துணை அலுவலர் ஜெயசீலன், நுண்ணுயிர் பாசனம் குறித்து வேளாண் உதவி அலுவலர் சரவணன், ஆத்மா திட்டம், அதன் செயல்பாடுகள் குறித்து வட்டார தொழில்நுட்ப அலுவலர் சிவசங்கரி ஆகியோர் விளக்கிக் கூறினர்.
தொடர்ந்து, வேளாண் அலுவலர்கள் காளி, சங்கர், தனஞ்செயன் ஆகியோர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் கிளையூர், ஊர்கவுண்டனூர் பகுதிகளைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.