திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை - அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளாக நேர்க்காணலில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கல்லூரியின் பணியமர்த்தும் அமைப்பு சார்பில், சென்னை ஸ்ரீராம் புராடக்ட் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த வளாக நேர்க்காணலை நடத்தியது.
விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன் வரவேற்றார். சென்னை ஸ்ரீராம் புராடக்ட் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த மனிதவள மேலாளர்கள் நடேசன், நாகராஜன், செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே வளாக நேர்க்காணலை நடத்தினர்.
2 கட்டங்களாக குழு விவாதமும், இறுதியாக நேர்க்காணலும் நடைபெற்றது. இந்த நேர்க்காணலில் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் எம்.கோபு, உயிர் தொழில்நுட்பவியல் பேராசிரியர் கு.ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.