3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மேல்வன்னியனூர் - தாங்கல் சாலை: கிராம மக்கள் அவதி

கலசப்பாக்கம் ஒன்றியம், மேல்வன்னியனூர் - தாங்கல் கிராமங்களுக்கு இடையிலான சாலையில் தார்ச் சாலை அமைப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை தோண்டப்பட்ட நிலையில்


கலசப்பாக்கம் ஒன்றியம், மேல்வன்னியனூர் - தாங்கல் கிராமங்களுக்கு இடையிலான சாலையில் தார்ச் சாலை அமைப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை தோண்டப்பட்ட நிலையில், இதுவரையில் தார்ச் சாலை அமைக்கப்படாததால் அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கலசப்பாக்கம் ஒன்றியம், மேல்வன்னியனூரில் இருந்து தாங்கல் கிராமத்துக்கு 3 கி.மீ. தொலைவிலான சாலை உள்ளது. இந்தச் சாலை மேல்வன்னியனூரில் இருந்து வில்வராணி, மேலாரணி வழியாக தாங்கல் கிராமம் வரை செல்கிறது.
இந்தச் சாலையில் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் சைக்கிள், இரு சக்கர வாகனங்களிலும், தனியார் பேருந்துகளிலும் சென்று வருகின்றனர். இந்தச் சாலையில் ரூ.45 லட்சத்தில் புதிதாக தார்ச் சாலை அமைக்க கடந்த 2014 - 2015ஆம் நிதியாண்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து, தார்ச்சாலை அமைப்பதற்காக ஒப்பந்தம் எடுத்தவர், ஏற்கெனவே இருந்த தார்ச் சாலையை பெயர்த்து எடுத்து மண் கொட்டி சமப்படுத்தியுள்ளார். ஆனால், அதன் மேல் தார்ச்சாலை அமைக்காமல் ஒப்பந்ததாரர் அப்படியே விட்டுச் சென்றதால், சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதுடன், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், இந்த வழியாகச் செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைந்து நடு வழியிலேயே நிற்பதால், பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்தச் சாலையில் உடனடியாக தார்ச் சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com