பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில், வேர்க்கடலை பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் பட்டை நாமம் போட்டு சனிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை பொய்த்ததால் மானாவாரி வேர்க்கடலை பயிர் விதைத்த விவசாயிகள் நஷ்டத்துக்கு உள்ளாயினர். நஷ்டத்தை ஈடுகட்ட அரசிடம் விவசாயிகள் நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால், அரசு விவசாயிகளின் கோரிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தினர் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் கூட்டுச்சாலைப் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்க மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில், விவசாயிகள் சனிக்கிழமை மாலை பட்டை நாமம் போட்டு பஜனை பாடல்கள் பாடியபடி நஷ்டஈடு வழங்காத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், கையெழுத்து இயக்கமும் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சங்கர், ரவிசங்கர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.