திருவண்ணாமலையில் குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
திருவண்ணாமலை, கொசமடத் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்த குப்பைகளை அகற்ற துப்புரவுப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அப்போது, தொட்டியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. தொடர்ந்து, குப்பைத் தொட்டியில் துப்புரவு ஊழியர்கள் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உதவி ஆய்வாளர் இளவரசி விரைந்து வந்து குழந்தையை மீட்டு, அவசர ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பச்சிளங் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற தாய் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.