பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்: ஆரணியில் இன்று சிறப்பு முகாம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் மேற்கு ஆரணி, ஆரணி ஒன்றிய அலுவலகங்களில் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) நடைபெறுகிறது.
மேற்கு ஆரணி, ஆரணி ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வசிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 2016 - 17, 2017 - 18-ஆம்  ஆண்டுகளுக்கான பாரத பிரதமரின் குடியிருப்புத் திட்டத்தின்கீழ், வீடு கட்டுவதற்கு விண்ணப்பிப்பதற்கான முகாம் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் இலக்கு விவரங்கள், சமூக பொருளாதார சாதிவாரி பட்டியலில் பெயர் உள்ளவராக இருக்க வேண்டும். இதற்கான பெயர் பட்டியல் அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை சரிபார்த்து அதில் தங்களது பெயர் இடம்பெற்று இருப்பவர்கள் மட்டும் வீடு பெற உரிய விண்ணப்பங்களை தயார் செய்து மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகத்திலும், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் திங்கள்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒப்படைத்து, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும், வீடு பெற விண்ணப்பிப்போருக்கு வீடு கட்ட போதுமான அளவில் குறைந்தது 300 சதுர அடி இட வசதி இருக்க வேண்டும். வேறு இடத்தில் நிரந்தர வீடு இல்லாதவராகவும், இதற்கு முன்பு அரசு திட்டத்தில் வீடு பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது நில உடைமை ஆவணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை, வங்கிப் புத்தகம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று மேற்கு ஆரணி, ஆரணி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், பாண்டியன் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com