அதிமுகவில் பாமக இணைந்ததால், பாஜக அதிருப்தி அடைந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
கட்சியின் ஆரணி தொகுதிச் செயலர் எம்.முத்துவின் தந்தை கடந்த 18-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சனிக்கிழமை ஆரணிக்கு வந்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எதிர்பாராத விதமாக அதிமுகவில் பாமக இணைந்ததால், பாஜகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளை அளித்து, பாஜகவுக்கு 5 தொகுதிகளை மட்டுமே வழங்கியதால், பாஜகவினர் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால்தான் அதிமுக தலைமையிலான கூட்டணி என்று கூறாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு தைலாபுரத்தில் ராமதாஸ் விருந்து அளித்தை மக்கள் விரும்பவில்லை என்றார் அவர். கட்சியின் மாவட்டச் செயலர் ம.கு.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், சில நாள்களுக்கு முன்பு காலமான ஆரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தத்தின் சகோதரர் ஆர்.தயாளனின் இல்லத்துக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு தொல்.திருமாவளவன் ஆறுதல் கூறினார்.