வாணியம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 200 வேட்டிகளை பைக்கில் கொண்டு சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பொங்கலை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வேட்டிகளை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து வாணியம்பாடி நேதாஜி நகர் வழியே செவ்வாய்க்கிழமை சென்றார். கோணாமேடு அருகே இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அதில், அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவரை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த இளைஞரிடம் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.