ஆரணி-ஆற்காடு சாலையில் ரூ.16 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
ஆரணியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக செய்தித் தொடர்பாளர் மருதுஅழகுராஜ், கழக அமைப்புச் செயலர் மைதிலிதிருநாவுக்கரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:
ஆரணியில் காமக்கூர் ஏரியில் ரூ.90 லட்சத்திலும், கொளத்தூர் ஏரியில் ரூ.85 லட்சத்திலும், எஸ்.வி.நகரம் அணைக்கட்டில் ரூ.95 லட்சத்திலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்பூண்டி - லாடப்பாடி இடையே செய்யாற்றின் குறுக்கே ரூ.6 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. ஆரணி -ஆற்காடு சாலையில் ரூ.16 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
ஆரணி நகரில் நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.10 கோடியில் சாலை, கால்வாய் வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் சேவூர் நெடுஞ்சாலையில் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வழங்கியுள்ள நிலத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று திறக்கப்பட உள்ளன என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன், பேச்சாளர் அமுதாஅருணாச்சலம், அவைத் தலைவர் ஜெமினிராமச்சந்திரன், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரிபாபு, நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, குமாரசாமி, திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், எல்.என்.துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.