வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் வந்தவாசி நகர செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வந்தவாசி பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டைப் போக்க வேண்டும். வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் வந்தவாசி நகரிலிருந்து கட்சியினர் பெருமளவில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு நகரச் செயலர் கி.இனியவன் தலைமை வகித்தார். நகர இணைச் செயலர் ம.விஜய், நகரப் பொருளர் கோ.சீனுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் ம.கு.பாஸ்கரன், தொகுதிச் செயலர் ம.கு.மேத்தாரமேஷ், மாவட்ட துணைச் செயலர் கோ.சிவகுமார், கிறிஸ்தவ நல்லிணக்கப் பேரவை மாநில துணை பொதுச் செயலர் ரா.மூவேந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், நகர துணைச் செயலர்கள் மு.காளிதாசன், பி.இருதயராஜ், மீ.ஜபருல்லா, எஸ்.பழனி, இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொகுதி அமைப்பாளர் ரா.அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.