பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை செங்குன்றம் நாரவாரிக்குப்பம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் வி.ராஜ்குமார் (59). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவர், தனது மனைவி செல்வியுடன் கடந்த வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்து செய்யாறுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாராம். செய்யாறு பேருந்து நிலையத்தில் இறங்கிய போது, செல்வி கொண்டு சென்ற கைப்பைத் திறந்த நிலையில் இருந்ததாம். மேலும், கைப்பையில் வைத்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலி, 4 பவுன் தங்க வளையல்கள், ரூ. 700 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜ்குமார் செய்யாறு போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்தார். அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் வி.பழனிச்சாமி வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.