ஆரணியை அடுத்த சேவூரில் புதன்கிழமை குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தார்.
சேவூர் காலனி பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் - நிஷாந்தி தம்பதியரின் மகள் அனுஷி (5). இவர், புதன்கிழமை காலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார்.
பின்னர், திடீரென அனுஷி மாயமானார். இதையடுத்து, அவரது பெற்றோர், உறவினர்கள் அவரைத் தேடினர். அப்போது, வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் அனுஷி மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அனுஷியை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.