காட்பாடி காந்தி நகரில் ரூ. 10 லட்சம் செலவில் பூங்காவை விஐடி பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இதை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
காட்பாடி காந்தி நகர் துளுவ வேளாளர் திருமண மண்டபம் அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 10 லட்சம் செலவில், 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இயற்கை சூழலுடன் கூடிய நேரு குழந்தைகள் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், புல்தரை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், சறுக்கு விளையாட்டுகள், தூரிகைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தப் பூங்காவை திங்கள் முதல் வெள்ளிக்
கிழமை வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பூங்காவை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை திறந்து வைத்தார். விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம், ஊராட்சி உதவி இயக்குநர் அருண், காந்திநகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.