மாநில அளவிலான தடகளப் போட்டியில் சாதனை படைத்த வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் பள்ளி மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் உ.சையத்நாசிப் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும், தேசிய அளவிலான போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.
சாதனை படைத்த மாணவருக்குப் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சிகரம் பள்ளியின் தலைவர் மணி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கல்பனா வரவேற்றார். துணைத் தலைவர் சீனிவாசன், செயலாளர் கிருஷ்ணன், இணைச் செயலாளர் பார்த்திபன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.
இதில், மாணவர் உ.சையத் நாசிப், உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம், ஆசிரியர் சரவணன் ஆகியோரை அறக்கட்டளை உறுப்பினர்கள் வேலு, நீதிமோகன், மக்கள் தொடர்பு அலுவலர் முகமதிதசீன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.