வாலாஜாபேட்டையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு ரூ. 1.5 கோடி செலவில் புதிய அலுவலகம் மற்றும் சேமிப்புக் கட்டடம் கட்டும் பணியை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வாலாஜாபேட்டையில் ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் பழைய கட்டடத்தில் போதிய வசதி இன்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு
ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு கட்டும் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டது.
இப் பணிகளை மாவட்ட ஆட்சியர்
எஸ்.ஏ.ராமன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு, பணிகளின் விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது விதை கிடங்கு அருகில் தனி நபரால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை உடனடியாக அகற்றுமாறு வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆய்வு மேற்கொள்ளும் செய்தி அறிந்த அனந்தலை, செங்காடு, வள்ளுவம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர், பழுதடைந்துள்ள வாலாஜாபேட்டை - மேல்வீராணம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த ஆட்சியர், அந்தச் சாலையை செப்பனிடும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்று தெரிவித்தார்.
முன்னதாக பழைய அலுவலக வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன விதை சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். அங்கு போதிய சாலை வசதி இல்லாதா காரணத்தால் சுத்திகரிப்பு நிலையம் இயங்காமல் உள்ளதை அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். உடனடியாக சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்புலட்சுமி, வேலாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பேபி பர்வதம், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) மகேந்திர பிரதாப் தீட்சித், துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) கிரிசந்திரசிங், வேளாண்மை உதவி இயக்குநர் (வாலாஜா) ஆர்.கிருஷ்ணவேணி, வட்டாட்சியர் பூமா, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.