குடியாத்தம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நகைத் தொழிலாளி டி. அரி (33). இவரது மனைவி ரோஜா(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனராம்.
இந்நிலையில், தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கிராமத்தில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.