வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார்.
ஆற்காடு முப்பதுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (42). தொழிலாளியான இவர், அரியூரை அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குவாரிக்கு சிலருடன் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குமார், குவாரியில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து இரு நாள்களாக தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் குமாரின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து, அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அரியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.