மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும், வாணியம்பாடி முஸ்லிம் கல்விக் கழகமும் இணைந்து நடத்திய கல்லூரிப் பேராசிரியர்களுக்கான 6 நாள் பயிற்சி முகாம் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
முகாமில் சேலம் ஸ்ரீசுரதா கல்லூரி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி, திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி, இஸ்லாமியா ஆண்கள் கல்லூரி, ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரி, குடியாத்தம் கேஎம்ஜி கல்லூரி, காட்பாடி ஆக்ஸீலியம் கல்லூரி, மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 67 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் தில்லியைச் சேர்ந்த பேராசிரியர்கள் சுரேஷ் யாதவ், எஸ்.கே. யாதவ், ஹைதராபாதிலிருந்து சாஜித் ஜமால், செந்தில்நாதன் (திருச்சி), கேரளத்தைச் சேர்ந்த ஜக்ரியா, முகமது அலி ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.
முகாமில், உயர்கல்வி நிறுவனங்களில் ஏற்படும் சவால்கள், அதனை சந்திக்கத் தேவையான அணுகுமுறைகள், நல்ல தலைமைப் பண்பு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் போன்றவை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக, முகாமினை தொழிலதிபர் பட்டேல் முகமது யூசுப் தொடங்கி வைத்தார். கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில், கல்லூரி கல்வி இணை இயக்குநர் வளர்மதி சிறப்புரையாற்றினார்.
முகாமுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சையத் சகாபுதீன், வாணியம்பாடி முஸ்லிம் சங்க பொதுச் செயலாளர் கைசர் அகமது ஆகியோர் செய்திருந்தனர்.