வாலாஜாபேட்டையில் மாவட்ட அளவிலான சிலம்பம் சாம்பியன் போட்டிகள் மற்றும் சிலம்பக் கலை செயல் விளக்கப் பேரணியை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார்.
மாவட்டத்திலேயே முதல்முறையாக தமிழர்களின் தற்காப்புக் கலை மற்றும் வீர விளையாட்டான சிலம்பக் கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வேலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் சாம்பியன் போட்டிகள் மற்றும் சிலம்பக் கலை செயல் விளக்கப் பேரணி வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சிலம்பக் கலை செயல் விளக்கப் பேரணி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து வாக்காளர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஒலிபெருக்கி வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.
விழாவில் ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, வருவாய் கோட்டாட்சியர் வேணு சேகரன், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் வை.பூமா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சி.சக்திவேல் குமார், ஒன்றியச் செயலாளர் சேஷா வெங்கட், முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.வேதகிரி, மாவட்ட சிலம்பாட்டக் கழக பொதுச் செயலாளர் பி.ஜெ.சத்தியமூர்த்தி, துணைச் செயலாளர் கே.மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிலம்பக் கலை போட்டியாளர்கள் சுமார் 450 பேர் பங்கேற்று 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் சிலம்பம், குத்துவரிசை, சுருள்வாள், மடு உள்ளிட்ட கலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் மாலை வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.