திருப்பத்தூர் அருகே செம்மரக் கட்டை கடத்த முயன்றதாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் கிராமிய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வை நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர்.
இதையடுத்து அவர்களை கிராமிய காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், திருப்பத்தூர் வட்டம், கொடுமாம்பள்ளியைச் சேர்ந்த விக்னேஷ் (22), கமலக்கண்ணன் (23), விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி (39), ஏழுமலை (24), தமிழ்ச்செல்வன் (24),திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (26), ஜமனாமுத்தூரைச் சேர்ந்த சின்னராஜ் (30) என்பதும், இவர்கள் செம்மரக் கட்டை கடத்தலில் ஈடுபட திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.