தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டிகளில் வேலூர் மாணவி ஹேமமாலினி, தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
வேலூரை அருகே ஒடுகத்தூர், மடையாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சா.நீலகண்டனின் மகள் ஹேமமாலினி. இவர், தற்போது சென்னையில் உள்ள எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார். இவர், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று 20 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோல், ஆந்திரம் மாநிலம், குண்டூரில் நடைபெற்ற இளையோருக்கான தென்மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற ஹேமமாலினி, 20 வயதுக்கு உள்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 42.30 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த மாணவி ஹேமமாலினிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.