வேலூர் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ரயில், பேருந்துகள் மூலம் கடத்தப்பட இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம் வழியாகச் செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.
இவற்றை அவ்வப்போது அதிகாரிகள் பறிமுதல் செய்வது வழக்கம். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
பாணாவரம், காட்பாடி, வாலாஜா, ஆம்பூர், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள், மாவட்டம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், வேலூர், காட்பாடி, நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
ஒரேநாள் இரவில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மாவட்டம் முழுவதும் 4 டன்னுக்கு அதிகமாக ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிபக் கிடங்களில் சேர்க்கப்பட்டன. எனினும், இந்த ரேஷன் அரிசி பறிமுதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.