வாணியம்பாடி அருகே உணவகங்களில் அனுமதியின்றி பயன்படுத்திய 7 சமையல் கேஸ் சிலிண்டர்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை வாணியம்பாடியை அடுத்த தும்பேரி அருகே ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தும்பேரி மலையடிவாரத்தில் பேருந்துகளில் கடத்துவதற்காக 20 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, தும்பேரி பகுதியில் தாபா உள்ளிட்ட உணவகங்களில் சோதனை செய்தபோது, அங்கு வீட்டிற்கு பயன்படுத்தப்படும் 7 கேஸ் சிலிண்டர்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 7 கேஸ் சிலிண்டர்களையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.