முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் திருப்பத்தூர் பெண் வழக்குரைஞருக்கு வட்டாட்சியர் வழங்கினார்.
திருப்பத்தூரைச் சேர்ந்த பொ.வே.ஆனந்தகிருஷ்ணன்-மணிமொழி தம்பதியின் மூத்த மகள் சிநேகா (35) வழக்குரைஞர். இவரது கணவர் கி.பார்த்திபராஜா, திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சிநேகா கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாதி, மதம் அற்றவர் என்று சான்று வழங்குமாறு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து பல்வேறு விசாரணைகளுக்குப் பின்னர், அவருக்கு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி திருப்பத்தூர் சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் டி.எஸ்.சத்தியமூர்த்தி, சிநேகாவுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து வழக்குரைஞர் சிநேகா கூறியது:
பள்ளியில் முதல் வகுப்பு சேர்க்கையின்போது பள்ளி நிர்வாகம் நான் என்ன ஜாதி என்று கேட்டது. எனக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை என்று என் பெற்றோர் கூறினர். பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் ஜாதி, மதம் குறிப்பிட்டதில்லை. இந்தியர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.
எனது சகோதரிகள் இருவரின் பிறப்பு சான்றிதழ், பள்ளி, கல்லூரி சான்றிதழ்களிலும் இந்தியர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.