வேலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வருகை தருகிறார் என வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆர்.காந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மாதனூர் ஒன்றியம், அகரம்சேரி ஊராட்சியில் காலை 8.30 மணிக்கு திமுக கொடியை ஏற்றி வைக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து சோலூர் ஊராட்சியில் காலை 10 மணியளவில் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பிற்பகல் 2.30 மணியளவில் வேலூர் கிழக்கு மாவட்டம், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாலாஜாப்பேட்டை ஒன்றியம், அனந்தலை, தகரகுப்பம் ஆகிய கிராமங்களில் திமுக கொடியை ஏற்றுகிறார். இதையடுத்து செங்காடு ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை திறந்து வைக்கிறார். 3.30 மணியளவில் சோளிங்கர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரடிகுப்பம் ஊராட்சியில் திமுக கொடியை ஏற்றி வைத்து, அங்கு நடைபெறவிருக்கும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மாலை 4 மணியளவில் சோளிங்கர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்னப்பந்தாங்கல் ஊராட்சி கூட்டுச் சாலையில் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தேர்தலின்போது வாக்குச் சாவடி முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கவுள்ளார்.