ஆம்பூர் அருகே வனப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் புதன்கிழமை கூண்டு வைத்தனர்.
ஆம்பூர் வனச்சரகத்தில் அபிகிரிப்பட்டரை, பொன்னப்பல்லி, காட்டு வெங்கடாபுரம், மத்தூர் கொல்லை, மலையாம்பட்டு, மிட்டாளம், பைரப்பள்ளி, பெங்களமூலை ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள கால்நடைகளைக் காப்புக்காடுகளில் இருந்து வரும் சிறுத்தை வேட்டையாடி வருகிறது. இதனால் அபிகிரிப்பட்டரை பகுதியில் சிறுத்தையைப் பிடிக்கும் கூண்டை கடந்த சில வாரங்களுக்கு முன் ஆம்பூர் வனத்துறையினர் வைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் கருங்கல்குட்டை பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று பகல் நேரத்தில் அபிகிரிப்பட்டரை வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகளைக் கடித்து குதறியது. அதனால் மேலும், ஒரு கூண்டை வைக்க மாவட்ட வன அலுவலர் மருத்துவர் முருகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறுத்தை கடித்து பலியான ஆடுகளின் உரிமையாளர் வெங்கடேசன் நிலத்தின் அருகே வனப் பகுதியில் இரு கூண்டுகளும் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இக்கூண்டுகளை பார்வையிட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் கூறியது:
சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ள வனப்பகுதிக்குள் அத்துமீறி யாரும் போகக் கூடாது. கால்நடைகள் மேய்ப்போர் அப்பகுதிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
வனவர்கள் கருணாமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், வனக்காப்பாளர்கள் விஜயன், சுரேஷ், செளந்தரராஜன், நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.