வேலூரில் ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர் வீட்டில் 8.5 சவரன் நகை திருடப்பட்டது தொடர்பாக சத்துவாச்சாரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் புவனேந்திரன்(62). ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளரான அவர் வேலூரில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மனைவியுடன் புதன்கிழமை இரவு சென்றிருந்தார். அவர்கள் வியாழக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த 8.5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக புவனேந்திரன், சத்துவச்சாரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். போலீஸார் விரைந்து வந்து பார்வையிட்டதுடன், அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயவியல் சோதனை நடத்தப்பட்டது. இந்த திருட்டு குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.