நெமிலி வட்டார அளவிலான திருக்குறள் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பினர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இணைந்து நெமிலி வட்டார அளவிலான திருக்குறள் எழுதும் போட்டிகளை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அளவில் அண்மையில் நடத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா அசநெல்லிகுப்பம் ஊராட்சி அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் சு. அன்பரசன் தலைமை வகித்தார். இதில், நெமிலி வட்டாரக் கல்வி அலுவலர் ஜி.சம்பத்குமார் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திராவின் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர்.விஜயாராவ், அரக்கோணம் டிஎஸ்பி துரைபாண்டியன், இந்தியன் வங்கி நெமிலி கிளை மேலாளர் எஸ்.ஜெயராமன், அசநெல்லிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.