மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படை வட்டாட்சியர் ரூபிபாய் தலைமையிலான குழுவினர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் புதன்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காட்பாடியைச் சேர்ந்த கிறிஸ்டோபரின் காரில் நடத்தப்பட்ட சோதனையில் காரின் இருக்கையில் இருந்த கைப்பையில் ரூ. 1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் மேல்விஷாரத்தில் உள்ள ஹோட்டலுக்கு மளிகை பொருள்கள் வாங்க பணம் கொண்டு செல்வதாக கிறிஸ்டோபர் கூறினார். எனினும், அந்தத் தொகைக்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தினர்.
இதேபோல், கிரீன் சர்க்கிள் சேவைச் சாலையில் சலவன்பேட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் வந்த காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 60 ஆயிரம் தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள், வட்டாட்சியர் ரமேஷ் மூலமாக கருவூலத்தில் செலுத்தினர்.