தேர்தல் அறிக்கைகளில் கைவிடப்பட்ட பாலாறு: பொது வேட்பாளரை நிறுத்த விவசாயிகள் திட்டம்

திமுக, அதிமுக, பாமக ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில்

திமுக, அதிமுக, பாமக ஆகிய பிரதான அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படாதது வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
 இதையடுத்து, அரசியல் கட்சிகள், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாலாறு நீராதார பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பொதுவேட்பாளரை நிறுத்த உள்ளதாக பாலாறு பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
 தமிழகத்தில் உள்ள ஜீவ நதிகளில் ஒன்றான பாலாறு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாசனப் பகுதிகளின் நீராதாரமாகவும், இந்த மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. எனினும், ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகள், தொடரும் மணல் கொள்ளை போன்ற காரணங்களால் தமிழகத்தில் பாலாறு வறண்டு பாழடைந்து வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னை குறித்து, ஒவ்வொரு தேர்தல் நேரத்தின் போது பேசப்படுவதும், திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், பின்னர் கிடப்பில் போடப்படுவதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மூலமேனும் பாலாறு நீராதாரப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பாலாறு பிரச்னைக்குத் தீர்வு காண உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே ஆதரவு அளிக்கப் போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாமக ஆகிய பிரதான கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில், பாலாறு பிரச்னை குறித்து பேசப்படாதது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
 இதையடுத்து, பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்த உள்ளதாக பாலாறு பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. 
 இதுகுறித்து, அந்த இயக்கத்தின் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் கூறியது:
 தமிழகத்தில் உள்ள நதிநீர் பிரச்னைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது பாலாறு விவகாரம். ஆனால், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆகியவை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் எதிலும் முல்லைப் பெரியாறு, காவிரி, மேக்கேதாட்டு குறித்து கூறப்பட்ட நிலையில் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படவில்லை. 
  அதேசமயம், திமுக தேர்தல் அறிக்கையில் மட்டும் தென்பெண்ணை, பாலாறு நதிகளில் தடுப்பணை கட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வறண்டு கிடக்கும் பாலாற்றுக்கு நீராதாரம் ஏற்படுத்த வேண்டும் என்பதே தேவையாக உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் தடுப்பணை கட்டுவதாக கூறியிருப்பது இப்பிரச்னை குறித்து திமுக முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.  மேலும், ஆண்டு முழுவதும் பாலாறு பிரச்னை குறித்துப் பேசி வரும் பாமக, தனது தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரத்தை கைவிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை  எழுப்புகிறது. 
 எனவே, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தேர்தல் அறிக்கைகளில் பாலாறு விவகாரம் புறக்கணிக்கப்பட்டது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், வேலூர் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்த பாலாறு பாதுகாப்பு இயக்கம் திட்டமிட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com