உரிய ஆவணங்கள் இன்றி தனிநபரால் வளர்க்கப்பட்ட யானை ஆனைமலைக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னராஜா. இவர் கோயில் பயன்பாட்டுக்காக என்று கூறி கர்நாடக மாநிலத்தில் இருந்து பெண் யானை குட்டி ஒன்றை 2001 ஆம் ஆண்டு வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
ஆனால், கன்னராஜாவால் யானையைப் பராமரிக்க முடியாதாதல், முகமது யூசுப் என்பவருக்கு அந்த யானையை 2003 ஆம் ஆண்டில் ஒப்படைத்துள்ளார். ஆனால், முகமது யூசுப் யானையை வளர்ப்பதற்கான சான்றிதழ் ஏதும் வைத்திருக்கவில்லை. இதுகுறித்து தேனி வனத் துறையினருக்கு புகார் செல்லவே, வனத் துறையினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றம் யானையை வனத் துறையினர் கட்டுப்பாட்டில் டாப்சிலிப் யானைகள் முகாமில் வளர்க்க உத்தரவிட்டனர். இதன்படி, அந்த யானை ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச் சரக அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
மருத்துவ பரிசோதனை செய்தபிறகே யானையை டாப்சிலிப் கொண்டு செல்ல முடியும் என்பதால், ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச் சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே யானை டாப்சிலிப் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.