துடியலூரை அடுத்த வடமதுரை துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மின்மாற்றி (டிரான்ஸ் பார்மர்) வெடித்ததால் துடியலூர் வட்டாரத்தில் மின்தடை ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பைகாரா மின்உற்பத்தி நிலையத்திலிருந்து அனுப்பப்படும் மின்சாரமானது வடமதுரையிலுள்ள துணை மின் நிலையத்தின் மூலம் கோவை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதற்காக இங்கு 20-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்மாற்றிகள் (டிரான்ஸ் பார்மர்) செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கு இரவு 10 மணியளவில் பயங்கர சப்தத்துடன் ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதனால் நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீச்சியடித்து அதனை அணைத்தனர். தொடர்ந்து மின்தடை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.