கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை "இளைய பாரதமே எழுந்திரு' எனும் தலைப்பில் தமிழக அளவிலான இளைஞர் முகாம் நடைபெற உள்ளது.
125 ஆண்டுகளுக்கு முன்னர் 1893ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றியதை நினைவு கூறும் வகையில் நடைபெறவுள்ள இந்த முகாம் குறித்து வித்யாலயக் கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் கூறியதாவது:
இதில் பங்கேற்கும் இளைஞர்களின் நற்பண்புகளையும், தனித்தன்மையையும் ஊக்குவிக்கும் பொருட்டு அறிவு, சமுதாயம் மற்றும் கலாசாரம் தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த முகாமில் இந்தியப் பாரம்பரியமும் பண்பாடும், சுவாமி விவேகானந்தரும் தேசப்பற்றும், சமுதாய வளர்ச்சியையும் மத நல்லிணக்கத்தையும் சார்ந்ததே ஒரு நாட்டின் முன்னேற்றம், இன்றைய இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் செய்தி, மகளிர் மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு, மனிதனை முழுமைபெறச் செய்யும் கல்வி, ராமாயணம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தாங்கள் சமர்ப்பிக்க விரும்பும் கட்டுரையின் நகலை நவம்பர்
20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இதுதவிர இந்திய அளவில் பிரபலமான சிறந்த ஆளுமைகளின் சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன.
இவை மட்டுமின்றி தியானம்,யோகா, விளையாட்டு, உரையாடல், கலைநிகழ்ச்சி ஆகியவையும் நடைபெறும்.
இந்த முகாமில் தமிழக முழுவதில் இருந்தும் இருபாலரும் பங்கேற்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை WWW.SRKV.ORG எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், முழு முகவரியுடன் நவம்பர் 20ஆம் தேதிக்குள் செயலாளர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன்பாளையம், கோவை-641020 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு 9944941427 எனும் செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.