வால்பாறை மலைப் பாதையில் அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் ஆவேசமடைந்த பயணிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசுப் போக்குவரத்துக்கழகம், வால்பாறை கிளை மூலமாக இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பல ஆண்டுகள் பழைமையானவை.
நீலகிரி மாவட்டத்துக்குப் புதிய பேருந்துகள் வந்தால், அங்கு இயக்கப்பட்ட பழைய பேருந்துகளை வால்பாறை கிளைக்கு வழங்குவது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளில் ஒரு புதிய பேருந்துகூட வால்பாறை கிளைக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து வந்த அரசுப் பேருந்து அட்டகட்டி 9ஆவது கொண்டை ஊசி வளைவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்குப் பழுதாகி நின்றுவிட்டது. கடும் குளிர் நிலவி வந்த நிலையில், பேருந்து பழுதானதையடுத்து ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் வந்த மற்றொரு பேருந்தில் பயணிகள் வால்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் சுமார் 1 மணி நேரம் பொள்ளாச்சி வால்பாறை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆழியார் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.