கோவையை அடுத்துள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான பாடநூல்கள் இன்னும் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி, கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசுப் பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான பாடநூல்கள் அக்டோபர் முதல் வாரத்திலேயே வழங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள 75 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், 5ஆம் வகுப்பில் மட்டும் சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.
அவர்களுக்கு சுமார் 40 நாள்களாகப் பாடநூல்கள் வழங்கப்படாததால், வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மாணவ-மாணவிகளுக்குப் பாடநூல்களை உடனடியாக வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.