ஓட்டுநரைத் தாக்கி லாரியைக் கடத்திய 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். ஜிபிஎஸ் கருவி லாரியில் இணைக்கப்பட்டிருந்ததால், கடத்தப்பட்ட லாரி விரைவில் மீட்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் மனோகரன் (30), லாரி ஓட்டுநர். இவர் கடந்த 11ஆம் தேதி கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சிபுரத்தில் இருந்து லாரியில் தேங்காய் ஏற்றிக்கொண்டு சென்னை சென்றுள்ளார்.
நெகமம் அருகே லாரி சென்றுகொண்டிருந்தபோது, லாரியை வழிமறித்த சிலர் ஓட்டுநரைத் தாக்கி காரில் கடத்தினர். அவர்கள் லாரியையும் கடத்திச் சென்றனர்.
பல்லடம் அருகே சென்றபோது, லாரி ஓட்டுநர் மனோகரனை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியது. லாரி ஓட்டுநர் மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில், நெகமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே லாரி கடத்தப்பட்டதை தொலைபேசி தகவல் மூலம் அறிந்த லாரி உரிமையாளரான சென்னை, போரூரைச் சார்ந்த பிரகாஷ் , அங்கிருந்தபடியே ஜிபிஎஸ் இணைப்புக் கருவி மூலம் லாரியின் இயக்கத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பல்லடம் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த வெங்கடேஷ்குமார் (25), ஹரிபிரசாத் (26) ஆகியோரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர்கள் லாரியை கடத்தியவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் பொள்ளாச்சியை அடுத்த கோயில்பாளையத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சியில் பதுங்கியிருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த கோகுல்குமார், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், திவான்சாபுதூரைச் சேர்ந்த மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட லாரியையும், லாரியில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 3.5 டன் தேங்காயையும் போலீஸார் மீட்டனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.