சிங்காநல்லூர் அரவான் கோயில் திருக்கல்யாணத் திருவிழாவை ஒட்டி மாநகரில் புதன்கிழமை முதல் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிங்காநல்லூர் அரவான் கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை (நவம்பர் 14) முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் மாநகரில் போக்குவரத்து கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பபட உள்ளது.
சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் வழியாகச் செல்லும் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் ஆணையங்காடு சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி அஸ்தாந்திர நாயக்கர் வீதி வழியாகச் சென்று வெள்ளலூர் சாலை புதுப்பாலம் வழியாகச் செல்லலாம்.
அதேபோல் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் சிங்காநல்லூர் சந்திப்பிலிருந்து ஒண்டிபுதூர் மேம்பாலம் வழியாக பட்டணம் வழியாகச் செல்ல வேண்டும். வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி வரும் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் வெள்ளலூர் மேம்பாலம் வந்து வலது புறமாகத் திரும்பி அக்ரஹார வீதி, பிள்ளையார் கோயில் வீதி, தேவேந்திரர் வீதி மற்றும் அஸ்தாந்திர நாயக்கர் வீதி வழியாக ஆணையங்காடு சாலை வழியாக திருச்சி சாலையைச் சென்றடையலாம்.
வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் பட்டணம் வழியாகச் செல்லவேண்டும். இந்த தற்காலி போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.