ஈச்சனாரியில் புதியதாக மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி சாலையில் எல் அண்டு டி புறவழிச்சாலை முதல் ஈச்சனாரி வரையில் சாலையில் செல்லக்கூடிய பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களின் போக்குவரத்தில் வியாழக்கிழமை முதல் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் செல்லும் வாகனங்கள் சுந்தராபுரம் எல்.ஐ.சி., சிட்கோ சந்திப்பு வழியாக நேராகச் சென்று ஈச்சனாரி கோயிலுக்கு முன் மதுக்கரை மார்க்கெட் சாலை, மஹாலட்சுமி கோயில் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி மீண்டும் மதுக்கரை மார்க்கெட் சாலையை அடைந்து, அங்கிருந்து இடது புறம் திரும்பி மீண்டும் மதுக்கரை மார்க்கெட் சாலையில் சென்று எல் அண்டு டி புறவழிச்சாலை வழியாக மலுமிச்சம்பட்டி சாலை வழியாகச் செல்லலாம்.
அதே போல், பொள்ளாச்சியில் இருந்து கோவை உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் மலுமிச்சம்பட்டி சாலை வழியாக அல்லது எல் அண்டு டி புறவழிச்சாலை வழியாக இடது புறம் திரும்பி மீண்டும் எல் அண்டு டி புறவழிச்சாலை வழியாக மதுக்கரை மார்க்கெட் சந்திப்பில் இருந்து பிள்ளையார்புரம் சந்திப்பு, காமராஜபுரம் சந்திப்பு வழியாக சுந்தராபுரம் சந்திப்பைச் சென்றடையலாம். மேம்பாலப் பணி நடைபெறும் பொள்ளாச்சி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.