தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.குமார் (63) வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 12ஆவது துணைவேந்தராக கு.ராமசாமி கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இரண்டாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட நிலையில் அவரது பதவிக் காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
முன்னதாக, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய துணைவேந்தராக என்.குமாரை நியமித்து ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டார்.
பல்கலைக்கழகத்தின் 13ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்ட என்.குமார், தோட்டக் கலைத் துறையில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தின் தோட்டக் கலைத் துறையில் முதல்வராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்நிலையில் புதிய துணைவேந்தராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட குமார், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.