கோவை அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பில் தி.சு.அவினாசிலிங்கத்தின் 27 ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சிற்றம்பலம் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் கே.வி.திருமால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் குழந்தைவேல் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராமகிருஷ்ண கோயிலில் இசைத் துறை மாணவிகளின் கூட்டுப் பிரார்த்தனையும், இதைத் தொடர்ந்து நினைவு மண்டபத்தில் உள்ள அவினாசிலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
பல்கலைக்கழக துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் கெளசல்யா உள்ளிட்ட நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.