டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உள்பட இருவர் உயிரிழந்தனர்.
கோவை, கவுண்டம்பாளையம், பி அண்டு டி காலனியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவரது மனைவி நாகமணி (47) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கோவை, சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் மித்ரா (1). இக் குழந்தை காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 13 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் குழந்தை மித்ரா புதன்கிழமை உயிரிழந்தது.
கோவை மருத்துவமனைகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளால் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 48 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.